கடலூர் அருகே பயங்கரம் மோட்டார் சைக்கிள், மின்மாற்றி மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது 2 வாலிபர்கள் பலியான பரிதாபம்

கடலூர் அருகே டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, மின்மாற்றி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2022-07-07 18:05 GMT


கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சபரிநாதன் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் செந்தில்குமார் (38) என்பவருடன் சொந்த வேலை காரணமாக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கடலூர் அடுத்த பெரியகாட்டுசாகை என்ற இடத்தில் சென்றனர்.

அந்த சமயத்தில் கடலூரில் இருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பெரியகாட்டுசாகை அருகில் சென்ற போது திடீரென டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சபரிநாதன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, அங்குள்ள துணைமின் நிலையம் அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதியபடி நின்றது.

மின்மாற்றியில் மோதல்

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே மின்மாற்றி மீது மோதிய பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் கொழுந்து விட்டு எரிந்த தீ, பஸ் முழுவதும் மளமளவென பரவி பற்றி எரிந்தது.

உடனே பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது. இந்த தீ விபத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொருவர் பலி

இதற்கிடையே விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமாரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்