மதுரையில் அண்ணன் - தம்பி வெட்டிக் கொலை- 8 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரையில் இரட்டையர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-01 13:19 GMT

காளையார்கோவில்,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரை சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரது மகன்கள் ஜெயசூர்யா(23), சுபாஷ்(23) இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள். பட்டதாரிகளான இவர்கள் இருவரும் மஞ்சு விரட்டு, மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்யும் வகையில் மாடுகளை வளர்த்து, உரிய பயிற்சியும் அளித்து வந்தனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான அரண்மனை சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் மகன் ராஜேஷ்(19), சாத்தரசன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி மகன் நவீன்(19), கிளுவச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி மகன் அஜய்(20) ஆகியோருடன் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் தங்கள் மாடுகளை முதலில் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி பனங்குடி கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டில் தங்களது மாடுகளை சகோதரர்கள் அவிழ்த்து விட்டனர்.

அப்போது, அந்த மாடுகளை சிவகங்கை அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்பவர் மகன் மதன்(20) மற்றும் அவனது நண்பர்கள் மாட்டை பிடித்ததாகவும் இதில் இரு தரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் மதன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டு பேரும் மூன்று இருசக்கர வாகனங்களில் சென்று ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மற்ற மூன்று பேரையும் தாக்க முற்படும்போது மூவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜெயசூர்யா,சுபாஷ் மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மதன் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்