வெற்றிலை விலை உயர்வு

பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால் வெற்றிலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-05-21 18:47 GMT

பரமத்திவேலூர்

வெற்றிலை ஏல சந்தை

பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலை கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

விலை உயர்வு

இதையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 200-க்கும் ஏலம் போனது. வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வெற்றிலை வரத்து குறைந்தும், முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்