எட்டயபுரத்தில் அ.தி.மு.க பொதுக்கூட்டம்

எட்டயபுரத்தில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-10-27 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் நகர அ.தி.மு.க சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், அ.தி.மு.க.வில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது வாடிக்கை. இதில் கட்சி எழுச்சியுடன் வெற்றி பெறும். கட்சி கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க.வில் தெளிவு ஏற்பட்டு, 3-வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார் என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க ஒன்றிய, நகர, பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கயத்தாறு அருகே உள்ள நொச்சி குளம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் 120 மீட்டர் புதிய சிமெண்டு சாலை திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி சாலையை திறந்து வைத்தார். விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் உள்பட ஏராளமான அ.தி.மு.க.கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்