ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-04 09:58 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தெலுங்குதேசம் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்று 128 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து முன்னிலையில் இருப்பதால் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. கூட்டணி கட்சியான பா.ஜ.க. 1 தொகுதியில் வெற்றி பெற்று 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஜனசேனா கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்று 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இரண்டும் கிட்டத்தட்ட நெருங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தெலுங்கு தேசம் 45.48 சதவீத வாக்குகளும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 39.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக பொறுப்பேற்கவுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆட்சிக்காலங்களில் நீங்கள் செயல்படுத்திய திட்டங்களும், 2024 தேர்தலில் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளும் உங்கள் தலைமையிலான அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன. ஆந்திர மக்களுக்கு நல்லாட்சி வழங்க எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்