விபத்தில் சிக்கிய பேராசிரியை உள்பட 4 பேரை மீட்ட அன்புமணி ராமதாஸ்: 108 ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு

தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த பேராசிரியை உள்பட 4 பேரை அன்புமணி ராமதாஸ் எம்.பி. மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2023-10-20 19:00 GMT

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சேலத்தில் இருந்து தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தர்மபுரி அருகே குண்டல்பட்டி சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி பேராசிரியை அருட்செல்வி (வயது45), கலையரசன் (21) மற்றும் 2 பேர் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் காயமடைந்தனர். மேலும் அவர்கள் 4 பேரும் சாலை ஓரத்தில் வலியால் துடித்துக்கொண்டு இருந்தனர்.

சிகிச்சை அளிக்க நடவடிக்கை

இதைப்பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கிய அன்புமணி ராமதாஸ் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து 108 ஆம்புலன்சை சம்பவ இடத்திற்கு வரவழைத்து காயமடைந்தவர்களை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய அவர் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்