அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.;

கோப்புப்படம்
சென்னை,
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளுக்கு, அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கனஅடி வீதம் 4,233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டம் அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2,661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 27-ந்தேதி (நாளை) முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி வரையிலான 135 நாட்களில், 70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், மொத்தம் 6,894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.