நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி: வாழ்த்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Update: 2024-07-03 15:44 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில் இன்று வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகம் ஆனார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்தார். இதனையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி அளித்தது. தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவருடன் பெற்றோர்கள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மத்தியில் வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதனையடுத்து வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்திற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில், சரத்குமார் மகள் வரலட்சுமி - நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். முதல்-அமைச்சருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்