தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: இந்தியக் கம்யூனிஸ்ட்

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் ஒரு நிரந்தர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-08-09 12:25 GMT

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் 32 பேரை மறுபடியும் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. நான்கு நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது.

முன்பு மீன்பிடி விசைப்படகுகளை வழி மறித்து பறிமுதல் செய்து, மீனவர்களை கைது செய்து வந்த இலங்கை கப்பற்படை, இப்போது நாட்டுப்புற படகுகளையும் பறிமுதல் செய்ய தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சுமார் 200 விசைப்படகுகள் மீட்கப்படாமல், இலங்கை கடற்கரைகளில் சேதம் அடைந்து அழிந்து கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், இந்திய கப்பற்படை, கடலோர காவல் படை ஆகியவையும் இருக்கின்றன. அவை ஏன் இந்திய மீனவர்களை பாதுகாக்க தவறுகின்றன என்பது வெளிப்படுத்தப்படவில்லை. அண்மையில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வை செல்வராஜ் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த பிரச்சினையில் மத்திய அரசு என்ன கருதுகிறது, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி வாய் திறந்து பேசவும் மறுக்கிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அண்டை நாடுகள் இருந்தும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை மட்டும் மத்திய அரசு காக்க தவறுகிறது.

மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. பேரிடர் காலங்களிலும் உதவிக்கரம் நீட்டுவதில்லை. இந்துத்துவ அரசியலுக்கு உடன்பட மறுப்பதனால், தமிழ்நாட்டு மக்கள் வஞ்சிக்கப்படுவதன் ஒரு பகுதியாகவே மீனவர் பிரச்சினையையும் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை கடற்படை கைது செய்து வைத்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், இந்த பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வு காணவும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்