தடுப்பணையில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

பள்ளப்பட்டி அருகே தடுப்பணையில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-18 19:21 GMT

தடுப்பணையில் தவறி விழுந்த மாணவர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ரங்கப்பகவுண்டன் வலசை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (வயது 19). இவர் கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் நங்காஞ்சி ஆற்று தடுப்பணைக்கு குளிப்பதற்காக அபினேஷ் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (32), பிரகாஷ் (27), அசோக்குமார் (17) ஆகிய 3 பேருடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது தடுப்பணையின் மேல்பகுதியில் குளிப்பதற்காக நின்ற அபினேஷ் கால் தவறி தடுப்பணையின் தண்ணீரில் விழுந்து தத்தளித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பற்றுங்கள்... என அபாய குரல் எழுப்பினர். அதற்குள் அபினேஷ் தண்ணீரில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தடுப்பணையில் இறங்கி அபினேசை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாலை 6.30 மணி அளவில் அபினேசை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அபினேஷ் உடலை அரவக்குறிச்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்