77-வது சுதந்திர தினம்:மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

77-வது சுதந்திர தினத்தையொட்டி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மாநில எல்லைகளில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-08-14 18:45 GMT

கூடலூர்

77-வது சுதந்திர தினத்தையொட்டி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மாநில எல்லைகளில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தினம்

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று (செவ்வாக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடிகளை ஏற்றுவதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி நடைபெறுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் மற்றும் கர்நாடகா- கேரளா மாநிலங்கள் இணையும் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாகன சோதனை தீவிரம்

மேலும் சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகளின் ஊடுருவாமல் தடுக்க மாநில எல்லைகளில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் மாநில எல்லையான கக்கநல்லா, கேரளா எல்லையான நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து இடங்களிலும் இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சந்தேகப்படும்படி வரும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கூடலூர், மசினகுடி, பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தங்கி உள்ளானரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும் படியான ஆட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டுமென விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்