தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2024-06-30 14:04 GMT

கோவை,

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பால்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது . கடந்த காலங்களில் பால் கொள்முதலில் தொய்வுநிலை மாறி தற்போது மிகப்பெரிய அளவில் ஒன்றியங்களில் மட்டும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலை உள்ளது. மேய்ச்சல் நிலம், விவசாயிகளின் நிலங்களில் தீவன பயிர்களை பயிரிடவும், ஊறுகாய் புல் என்ற தீவன பயிரை அதிகமாக விலைச்சல் செய்து, மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டமும் முதல்கட்டமாக ஈரோட்டில் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

நெய் போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள் தாங்கக்கூடிய குணம் உள்ளிட்டவைகள் பற்றி ஆராய்ந்து புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம். தமிழகத்தில் காளை கன்றுகளுக்கு உழவு, உணவு ஆகியவைகளுக்கு மிக தேவை உள்ளது. கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என நான் சொல்ல மாட்டேன். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் பால் தரும் நிலையில், நமது நாட்டு மாடுகள் 5-6 லிட்டர் தருகிறது. இதை 10-15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். அதற்காக தான் நாட்டு இனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்.

20 லட்சம் கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசிவழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அமுல் நிறுவனம் விவாதத்திற்கான பொருளே கிடையாது. ஆவின் தயாரிப்புக்கு மக்கள் வரவேற்பு உள்ளது. ஆவின் நிறுவனம் முடிந்ததாக சிலர் சொன்ன நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் எப்படி செய்ய முடிந்தது?. மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்தி அனுமதி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தின் கிளைகள் அதிகரிக்க தேவை உள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்