மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ராமநாதபுரத்தில் இன்று வகுப்புகள் தொடக்கம்

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் மட்டும் செயல்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான தற்காலிகமாக வகுப்பு இன்று முதல் தொடங்கியது.

Update: 2022-04-04 06:18 GMT
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்- அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல்கட்டமாக ராமநாதபுரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. 

இதனை தொடர்ந்து மீதம் உள்ள 50 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேருக்கு ராமநாதபுரத்தில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக வழிகாட்டுதல் நெறி முறைகள் குறித்த வகுப்பு நடத்தப்பட்டது. இன்று காலை முதல் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் செயல் இயக்குனர் ஹனுமந்த ராவ் கூறியதாவது,

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் ஐந்தாவது தளத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாம் ஆண்டு வகுப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே இங்கு செயல்படும் அதன் பின்னர் மதுரைக்கு மாற்றப்படும். மேலும் தமிழகத்தில் ஜிப்மர் மருத்துவமனை வருவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் செயல் இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்