டி.டி.வி.தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு விசாரணை தள்ளிவைப்பு

ஐகோர்ட்டு உத்தரவுப்படி அன்னிய செலாவணி மோசடி புகாரில் டி.டி.வி.தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.;

Update:2017-08-02 03:15 IST
சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவுப்படி அன்னிய செலாவணி மோசடி புகாரில் டி.டி.வி.தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன்பின்பு, வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை (3-ந் தேதி) தள்ளிவைத்தார்.

அ.தி.மு.க. அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் அமலாக்கப்பிரிவால் தொடரப்பட்டது. அதில் ஒரு வழக்கு, இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 93 லட்சத்து 313 ஆயிரம் அமெரிக்க டாலரை முறை கேடாக டெபாசிட் செய்த தாகும்.

இன்னொரு வழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஓட்டல் தொடங்குவதற்காக 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலர், ஒரு லட்சம் பவுண்டு ஆகியவற்றை டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் உள்பட 3 நிறுவனங்கள் மூலம் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்ததாகும்.

இந்த 2 வழக்குகளிலும் டி.டி.வி.தினகரன் மீது எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, முதல் வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை பதிவு செய்யும்போது தனது தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய வாய்ப்பு வழங்காததால் அந்த குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முதல் வழக்கில் அவர் மீது எழும்பூர் கோர்ட்டு பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்தது. மேலும், டி.டி.வி.தினகரனுக்கு போதிய வாய்ப்பு அளித்து குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன்பின்பு, அந்த வழக்கை 3 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப் பித்தது.

அதன்படி நேற்று டி.டி.வி. தினகரன் மீதான முதல் வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.

அவர் மீதான குற்றச்சாட்டை நீதிபதி மலர்மதி படித்து காண்பித்தார். அதன்பின்பு, உங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தினகரன், தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

இதைதொடர்ந்து, அரசு தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு தினகரன், ‘ஆம்’ என்று பதில் அளித்தார். இதைதொடர்ந்து தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்காக அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை(3-ந் தேதி) தள்ளிவைத்தார். இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரன், ‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கில் நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன்’ என்றார்.

மேலும் செய்திகள்