போதைப் பொருட்கள் விற்பனை செய்த 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் - மா.சுப்பிரமணியன் தகவல்

33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-11 09:08 GMT

ஈரோடு,

ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு தொடங்கப்பட்டது. 15 ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.பவானி அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32 ஆயிரத்து 404 கடைகளில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.அந்த கடைகளில் இருந்து ரூ.20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 468 ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 86 ஆயிரத்து 681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக 17 ஆயிரத்து 481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்