அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 புதிய பேருந்துகள் - அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2024-08-28 09:22 GMT

சென்னை,

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக, மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எஸ்.5 ரக 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் சிறப்பு அம்சங்கள் உள்ளது.

புதிய பேருந்தில் பயணிகளுக்கான முக்கிய அம்சங்கள்:

● இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.

● மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளன.

● படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

● ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

● ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.

● பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.

● நடத்துனரால் பயணிகளுக்கு தகவல் அறிவிப்புகளுக்கான ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.

● பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

● பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், மு.சண்முகம், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் . மோகன், உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்