பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரம்: மூன்றாவது நாளாக இரவிலும் தொடரும் டாக்டர்கள் போராட்டம்

பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

Update: 2024-09-12 22:01 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும் மேற்கு வங்காளத்தில் இளநிலை டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்வந்தார். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதேநேரம் முதல்-மந்திரியுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டாக்டர்கள் நிபந்தனை விதித்து இருந்தனர்.

இந்த நிலையில் டாக்டர்களுடனான பேச்சுவார்த்தைக்காக மம்தா பானர்ஜி நேற்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். ஆனால் போராட்டக்குழுவினர் யாரும் வரவில்லை. பின்னர் சுமார் 5.25 மணியளவில் போராட்டக்காரர்கள் தலைமை செயலகம் வந்தனர். ஆனால் உள்ளே செல்லாமல், வாசலிலேயே நின்று கொண்டு தங்கள் கோரிக்கையை (பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்தல்) வலியுறுத்தினர். அவர்களுடன் தலைமை செயலாளர் மனோஜ் பந்த், போலீஸ் டி.ஜி.பி. ராஜீவ் குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்காக மம்தா பானர்ஜி காத்திருப்பதையும் எடுத்துக்கூறினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சுமார் 2 மணி நேரம் காத்திருந்த மம்தா பானர்ஜி பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மம்தா பானர்ஜி, "இளநிலை டாக்டர்களுடனான பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது. ஏனெனில் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. அதேநேரம் பேச்சுவார்த்தையை பதிவு செய்ய ஏற்பாடு செய்தோம். சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தால் அதை அவர்களிடம் வழங்க தயார் எனவும் தெரிவித்தோம்.

கடந்த 33 நாட்களாக ஏராளமான அவமானங்களையும், பொய் குற்றச்சாட்டுகளையும் சகித்து விட்டோம். நோயாளிகள் நலனுக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் இளநிலை டாக்டர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என நினைத்தேன். இதற்காக 2 மணிநேரத்துக்கு மேலாக காத்திருந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. இந்த விவகாரத்தில் மக்கள் நலன் கருதி, முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக நான் தயார். கொல்லப்பட்ட டாக்டருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால் அதற்கான வழி இது அல்ல.

இந்த பிரச்சினை இன்று (நேற்று) முடிவுக்கு வரும் என எதிர்பார்த்திருந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போதும் சொல்கிறேன், பேச்சுவார்த்தைக்கு வராததற்காகவும், எங்களை 2 மணி நேரம் காக்க வைத்ததற்காகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம். மூத்தவள் என்ற முறையில் எங்கள் இளையோரை மன்னிப்பது எங்கள் கடமை" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் உள்ள ஸ்வஸ்த்யா பவனில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இளநிலை டாக்டர்கள் இரவிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்