ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முன்னுரிமை: ராகுல் காந்தி உறுதி

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

Update: 2024-08-22 09:42 GMT

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் மாநில அந்தஸ்தை விரைவில் மீட்டெடுப்பதே எங்களின் முன்னுரிமை. இந்தியா கூட்டணியின் முன்னுரிமையும் இதுதான். தேர்தலுக்கு முன்பே இதை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். இருந்தாலும் பரவாயில்லை. இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மாநில அந்தஸ்து மீட்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எனக்கும் இடையே மிக ஆழமான உறவு உள்ளது. இங்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவ காங்கிரஸ் எப்போதும் துணைநிற்கும். நீங்கள் (மக்கள்) மிகவும் கடினமான, கடினமான காலகட்டத்தை கடந்து செல்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் வன்முறையை அகற்ற விரும்புகிறோம்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு மாநிலமானது யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைக்கப்பட்டது இங்குதான். இதற்கு முன்னர் இப்படி நடந்ததில்லை. யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாறியுள்ளன, ஆனால் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறியது இதுவே முதல் முறை. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை திரும்ப பெறுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்