பாரத இணைப்பு யாத்திரை: சமூக அமைப்பு தலைவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு சமூக அமைப்பு தலைவர்களுடன் உரையாடினார்.

Update: 2022-08-22 17:52 GMT

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி தலைமையில் 'பாரத இணைப்பு யாத்திரை'யை (பாரத் ஜோதோ யாத்ரா) நடத்த இருக்கிறது. அடுத்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்கிறது. மொத்தம் 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்தை 150 நாட்களில் கடக்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த யாத்திரை குறித்து சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு கலந்துரையாடல் கூட்டம் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு சமூக அமைப்பு தலைவர்களுடன் உரையாடினார். காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங், சமூக செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், யாத்திரை செல்லும் வழிகள், அங்கு யார் யாரையெல்லாம் சந்திப்பது, எந்தெந்த பகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன, யாத்திரையில் சமூக அமைப்புகளில் இருந்து பங்கெடுப்பவர்கள் யார் யார் என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்