காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த 4 மாதங்களில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2024-05-15 21:49 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே ஜல்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஸ்ரீசித்தேஷ்வர் பரங்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 30). அதேப்பகுதியை சேர்ந்தவர் ராக்கி (பெண்). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மனோஜ்குமார், தனது மனைவி ராக்கி, தாய் பாரதியுடன் அந்தப்பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதி, தனது மகளை பார்க்க ஊருக்கு சென்றிருந்தார். இதனால் மனோஜ்குமாரும், ராக்கியும் தனியாக இருந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மனோஜ்குமாரும், ராக்கியும் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதற்கிடையே நேற்று காலை மனோஜ்குமாரின் தாய் பாரதி, வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டுக்குள் மனோஜ்குமாரும், ராக்கியும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

பின்னர் இதுபற்றி அவர்கள் ஜல்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய மனோஜ்குமார் மற்றும் ராக்கியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பதியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. மேலும் கடிதம் எதுவும் எழுதி உள்ளனரா? என்று போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். ஆனால் கடிதம் எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து ஜல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த 4 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்