பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

புத்தூரில் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் கொட்டி வீணானது.

Update: 2023-04-15 21:15 GMT

மங்களூரு:-

பால் டேங்கர் லாரி கவிழ்ந்தது

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவில் விவசாயிகளிடம் இருந்து கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் பால் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புத்தூர் தாலுகா கல்லுகுட்டே, கடபா பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து பால் சேகரித்துவிட்டு கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான பல் டேங்கர் லாரி, மங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த லாரி, புத்தூர் அருகே உப்பினங்கடி-சுப்பிரமணியா மாநில நெடுஞ்சாலையில் குத்தூர் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் ஆறாக ஓடிய பால்

இந்த விபத்தில் லாரியின் டிரைவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும் டேங்கர் லாரியில் இருந்த பால் சாலையில் கொட்டி வீணானது. அதாவது மொத்தம் டேங்கரில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் பால் சாக்கடை மற்றும் சாலையில் கொட்டியது. இதனால் அந்தப்பகுதியில் பால் ஆறாக ஓடியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடபா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த லாரியை போலீசார் மீட்டனர்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்தால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்