மக்களவை தேர்தல் ; வரும் 7 ஆம் தேதி முதல் மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்..!

மக்களவை தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

Update: 2024-01-05 08:18 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று அமைந்த மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொளி வாயிலாகவும், நேரடியாக அந்த மாநிலங்களுக்கு சென்றும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களவை தேர்தலுக்கான மாநிலங்களின் தயார்நிலை குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது.

தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழு வரும் 7 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆய்வு செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்