முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.;

கோப்புக்காட்சி
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவுக்கு (82) சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் டாக்டர்கள் முலாயம் சிங் யாதவை ஐசியூ வார்டுக்கு மாற்றி அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனினும் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வெளியே வந்து குவிந்து விடவேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அவர் முழு அளவில் குணமடைந்த பின்னர் அவரை பார்க்கலாம் என்றும் அக்கட்சி தெரிவித்து உள்ளது.
முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் தனது மனைவியுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.