ஊழியர்களிடம் தகராறு; ஏர் இந்தியா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி

ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பெண் பயணி இறக்கிவிடப்பட்டார்.;

Update:2024-03-07 14:46 IST
ஊழியர்களிடம் தகராறு; ஏர் இந்தியா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். விமானத்தின் பிசினஸ் வகுப்பில் பயணிப்பதற்காக அவர் டிக்கெட் எடுத்திருந்திருந்தார் என்றும், அவர் ஒரு தொழில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தின் கேப்டன் அந்த பெண் பயணியை விமானத்தில் இருந்து இறக்கிவிட உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் பயணி இறக்கிவிடப்பட்டார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் கடந்த 5-ந்தேதி நடந்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய இருந்த பெண் பயணி ஒருவர், ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், பின்னர் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற்றுக்கொண்டு மற்றொரு விமானத்தில் அவரை அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்