மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்? - விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்

சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-06-03 07:32 GMT

புவனேஷ்வர்,

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தது எப்படி?

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது.

ஷாலிமார் - சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

அப்போது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஷாலிமார் - சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தவறுதலாக சென்றுள்ளது.

காரக்பூர் ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த பெறப்பட்ட முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் பஜாரை கடந்த பின்னர் ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தவறுதலாக மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே சரக்கு ரெயில் ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது.

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது, சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது.

இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.

இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளுன் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் மொத்தம் 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ரெயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பலர் பயணித்துள்ளதால் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேவேளை விபத்தில் உயிரிழந்த 261 பேரின் விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று தண்டவாளத்தில் தவறுதலாக சென்று சரக்கு ரெயில் மீது மோதியிருக்கலாம். இதன் காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் தடம்புரண்டிருக்கலாம் அப்போது அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹவுரா எஸ்பிரஸ் ரெயில் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த விபத்து குறித்து ரெயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவடையும் போது தான் 3 ரெயில்கள் விபத்துக்கான முழுமையான காரணம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்