வங்கியில் திருட முயன்ற ஒருவர் கைது
உத்தரகன்னடா அருகே, வங்கியில் திருட முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
மங்களூரு;
உத்தர கன்னடா மாவட்டம் ஹொன்னாவர் பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் வங்கி ஊழியா்கள் வேலை முடிந்த பின்னர் இரவு வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். அந்த வங்கிக்கு காவலாளி இல்லை என்று கூறப்படுகிறது.
நேற்று அதிகாலையில் மர்மநபர்கள் 2 பேர் அந்த வங்கியின் முன்பக்க ஷெட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரை பொதுமக்கள் உடனடியாக ஹொன்னாவர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பிடிபட்டவரின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.