வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது

திரிபுராவில் உரிய ஆவணங்கள் எதுமின்றி வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் நுழைந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2024-09-02 00:30 GMT

அகர்தலா,

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வங்காளதேசத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள திரிபுராவில் உரிய ஆவணங்கள் எதுமின்றி வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் நுழைந்து உள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது.

இதனையடுத்து ரெயில்வே போலீசார் உதவியுடன் அகர்தலா ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வங்காளதேசத்தில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் கொல்கத்தாவுக்கு தப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலாய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்க முயன்ற 2 இந்தியர்களும் கைதாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்