கொடுமை...! இறந்த மகளின் உடலை 10 கிலோ மீட்டர் தோளில் சுமந்து நடந்தே சென்ற தந்தை

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்;

Update:2022-03-26 10:54 IST
சர்குஜா: 

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சலால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். அவளது ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. சுகாதார மருத்துவ மையத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்கு பணியும் டாக்டர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதனையடுத்து இறந்த தமது மகளின் உடலை தோளில் சுமந்தவாறு ஈஸ்வர் தாஸ் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். 

இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வைரலானது.  இதையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சிங் தியோ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மந்திரி பேசியதாவது:

நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். வேதனையாக  உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்