பல்லி கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 80 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

இது குறித்து விசாரித்த காவல் துறையினர், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

Update: 2021-12-28 07:35 GMT
கர்நாடகா,

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு பல்லி இறந்து கிடந்த மதிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் வெங்கடாபுரா தாண்டா என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப் பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவை சாப்பிட்ட 80 குழந்தைகளும் சிறிது நேரத்திலே நோய்வாய்ப்பட்டனர்.

இதனால் 80 குழந்தைகளும் ராணிபென்னூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பியதாக  பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரித்த காவல் துறையினர், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகிகள்  மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்