அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நிதின் கட்கரி

அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Update: 2019-11-14 16:15 GMT
மும்பை,

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று டெல்லியில் நடைபெற்ற 39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை துவங்கி வைத்தார். பின்னர் மராட்டிய மாநிலத்திற்கு சென்ற அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மராட்டிய மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் தோற்பது போல் இருக்கும், போட்டியின் முடிவில் திடீரென தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது.

டெல்லியில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். அதனால் மராட்டிய மாநிலத்தில் நடக்கும் அரசியல் பற்றி எனக்கு தெரியாது” என்றார்.

மராட்டிய மாநிலத்தில் பாஜக அல்லாத அரசு அமைந்தால் மும்பையில் நடந்து வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிலை என்ன ஆகும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், “அரசாங்கங்கள் மாறினாலும், திட்டங்கள் தொடரும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜக, தேசியவாத காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் எதுவாக இருந்தாலும், அரசாங்கத்தை உருவாக்கும் எந்தவொரு கட்சியும் நேர்மறையான கொள்கைகளை ஆதரிக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்