மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-04-16 21:16 GMT
புதுடெல்லி,

மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு பணி நியமனங்கள் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்த தொகை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்பு வாரிய தலைவரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்பு வாரிய கல்லூரி நிர்வாகி என்.ஜமால் முகைதீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து, அவற்றை ‘சீல்’ இடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்