கோழிப்பண்ணையில் பதுக்கிய 200 மூட்டை ரேஷன்அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
நாமக்கல்:-
வெண்ணந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே கல்லாங்காட்டனூர் ஓலப்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சேலம் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் அந்த கோழிப்பண்ணையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன்அரிசி கோழித்தீவனம் அரைப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 200 மூட்டைகளில் இருந்த சுமார் 10 டன் ரேஷன்அரிசியை குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோழிப்பண்ணை உரிமையாளர் தலைமறைவு
இதற்கிடையே வெண்ணந்தூரை சேர்ந்த அந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் மனோபாரதி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் சிக்கினால் தான் ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்பட்டு, கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.