காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் செல்லும் ராஜஸ்தான் இளைஞர் நாமக்கல் வருகை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் செல்லும் ராஜஸ்தான் இளைஞர் நாமக்கல் வருகை;
நாமக்கல்:
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்த ஜகன்லால் என்பவரின் மகன் பிரதீப் (வயது 21), அங்குள்ள எம்.எஸ்.எல்.யு. கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்து உள்ளார். இந்திய மாநிலங்களின் கலாசாரம் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட இவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இதையொட்டி கடந்த 30.11.2021-ல் காஷ்மீர் மாநிலம் ஜமுதாவி பகுதியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கினார். கடந்த 5 மாதங்களாக பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மராட்டியம், கர்நாடகம் வழியாக நடந்து இப்போது தமிழகம் வந்துள்ளார். ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக வந்த அவர் நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தார்.
சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தேசியக்கொடியுடன் சென்ற அவரிடம் நடைபயணம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் கலாசாரம் குறித்து அறிந்துகொள்ள இந்த பயணம் மேற்கொண்டு உள்ளேன். தினமும் சுமார் 25 முதல் 30 கி.மீ தூரம் வரை நடைபயணம் செய்வேன். நெடுஞ்சாலைகளில் உள்ள வட மாநிலத்தவர்களின் தாபா ஓட்டல்கள், மார்வாடிகள் உதவியுடன் தங்கி உணவருந்தி ஓய்வெடுத்து செல்வேன். இன்னும் ஒரு மாதத்தில் எனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்து பின்னர் ரெயில் மூலம் ராஜஸ்தான் திரும்புவேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள், மக்களின் கலாசாரம், கிராமிய உடைகள், இட்லி, தோசை போன்ற உணவுகள் என்னை கவர்ந்துள்ளன என்றார்.