மேக்காமண்டபத்தில் இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்க சென்ற அதிகாரிகளால் பரபரப்பு
மேக்காமண்டபத்தில் இறைச்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்க சென்ற அதிகாரிகளால் பரபரப்பு;
தக்கலை,
கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்காமண்டபத்தில் 7-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவுநீரை மழைநீர் வடிகால் ஓடையில் விடுவதாக தெரிகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து சுற்றுச்சூழல் துறை அலுவலர் சுயம்பு தங்கராணி சம்மந்தப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று காலையில் கோதநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் தக்கலை வட்டார சுகாதார அலுவலர்கள் ராஜன், மனோகரன், மேற்பார்வையாளர் செல்வம், பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிறேமகுமாரி மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மேக்காமண்டபம் பகுதிக்கு சென்றனர். அங்கு விதிமுறைகளை மீறிய கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க முயன்றனர். இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் வரை வியாபாரம் செய்யகூடாது என கூறி கடைகளை பூட்டி சாவியை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் மேக்காமண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.