துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்; கேரள பயணி கைது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள பயணி கைது செய்யப்பட்டார்.;
மங்களூரு:
மங்களூரு விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மங்களூரு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது.
அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அதே விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்கவரித்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்
இதையடுத்து தனியாக அழைத்து சென்று அவரையும், அவரது உடைமைகளையும் சுங்க வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர், தனது உடைமைகளில் பற்பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், கேரளாவை ேசர்ந்தவர் என்பதும், துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 706 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும்.
இதைதொடர்ந்து அவரை, பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.