முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறவினர்களிடம் போலீசார் விசாரணை

மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கூடுதல் தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி தொடர்கிறது.

Update: 2021-12-18 19:33 GMT
விருதுநகர், 
மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கூடுதல் தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி தொடர்கிறது. 
தலைமறைவு 
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசி முடித்தவுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 
இதற்கிடையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணைக்காக அழைத்து வந்தனர். நள்ளிரவு 1 மணியை கடந்தும் 3 பேரையும் போலீசார் விடுவிக்காததால் இந்த தகவல் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரவியது. இதைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், திருத்தங்கல் பொன்சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், விஸ்வநத்தம் ஆரோக்கியம், வெங்கடேஷ், சுடர்வள்ளி சசிக்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருத்தங்கல் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் அமைச்சரின் உறவினர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரினர். அதன் பின்னர் அதிகாலை 3 மணிக்கு திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விருதுநகர் அழைத்து சென்றனர்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் அவர்களிடமிருந்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் நேற்று விசாரணையை முடித்து அவர்கள் 3 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தேடும் பணி 
இதற்கிடையில் அவர்கள் 3 பேரையும் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றபோது அ.தி.மு.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரபாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் அவரது இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீசாருக்கு எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்படை 
இதற்காக கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் யாரேனும் அவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொள்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவருடன் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் வக்கீல் முத்து பாண்டி ஆகியோரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்