திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன துணை மேலாளர் சாவு
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன துணை மேலாளர் பரிதாபமாக இறந்து போனார்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சரவணன் (வயது 29). இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த பாண்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இரவு சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டருடன் இணைந்த டிரைலரின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து சீனிவாசன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.