பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

களியக்காவிளை அருகே பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் பரப்பியதால் அதிர்ச்சி தகவல் வெளியானது.

Update: 2021-11-09 21:28 GMT
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் பரப்பியதால் அதிர்ச்சி தகவல் வெளியானது.
மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்
கொரோனா பரவல் குறைந்த பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு வந்து செல்கின்றனர். 
இந்தநிலையில் குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவன், ஒரு மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ வைரலாக பரவல் 
அதாவது கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.
இந்தநிலையில் அந்த மாணவன் வீடியோவை தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக மாணவர்களுக்கு உற்சாகமாக அனுப்பியுள்ளனர். இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் காட்டுத்தீ போல் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பளுகல்  போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
3 பேர் இடைநீக்கம்
இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவன், மாணவி மற்றும் வாட்ஸ் அப்பில் பரவ விட்ட மாணவன் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிரடியாக 3 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
மேலும் போலீசாரும் விசாரணையின் முடிவில் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவிக்கு, மாணவன் தாலி கட்டிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்