குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் குடிசை மாற்று வாரிய வீடு கேட்டு விண்ணப்பிக்க பெண்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு கூட்டமாக நின்றனர்.

Update: 2021-07-05 16:35 GMT
உத்தமபாளையம்: 

உத்தமபாளையம் தாலுகாவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கோம்பையில் 480, வீடுகள், சின்னமனூர் அப்பிபட்டியில் 432, கூடலூர் அருகே தம்மனம்பட்டியில் 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 

இதில் தகுதி உள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அதன் அடிப்படையில் கடந்த 30-ந்தேதி முதல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் வீடுகள் இல்லாத பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்று வருகிறது. 

நேற்று 6-வது நாளாக கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, சின்னமனூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் வந்து மனு அளித்தனர். அவர்கள் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு, உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். 

இதனால் உத்தமபாளையம் கோம்பை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுைகயில், நாளை (புதன்கிழமை) மனு அளிக்க கடைசி நாளாகும். 

மனு அளிக்க விருப்பமுள்ளவர்கள் மனுதாரர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன்-மனைவி ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்