நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆஷிஸ் ராவத் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆஷிஸ் ராவத் பொறுப்பேற்று கொண்டார்.

Update: 2021-06-18 15:39 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பாண்டியராஜன் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டெண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

பின்னர் புதுடெல்லியில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் 8-வது பட்டாலியன் கமாண்டெண்டாக பணிபுரிந்து வந்த ஆஷிஸ் ராவத், நீலகிரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்க ஆஷிஸ் ராவத், ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். 

பின்னர் கோப்புகளில் கையெழுத்திட்டு போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜனார்த்தன், ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின்னர் புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளேன். முதல் முறையாக ஒரு மாவட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று இருக்கிறேன். 

மற்ற இடங்களைவிட மலைப்பகுதி வித்தியாசமாக இருக்கும். கொரோனா பரவல் காலம் என்பதால் நீலகிரிக்கு என்ன தேவை, இங்குள்ள குறைகள் என்ன? என்பதை கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். நீலகிரி மாவட்டத்துக்கு ஆஷிஸ் ராவத் 92-வது போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்