கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்
மாவட்டத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தெரிவித்தார்
விருதுநகர்,
மாவட்டத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தெரிவித்தார்
பொறுப்பேற்பு
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பெருமாள், சென்னைக்கு மாற்றப்பட்டதையடுத்து சென்னையில் உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிய மனோகர், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் பெற்றார்.
அவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
நடவடிக்கை
இதனைத்தொடர்ந்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
தற்போது உள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசாரும் பங்கேற்கும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட இதர பணிகளிலும் கவனம் செலுத்தப்படும்.
23 ஆண்டு கால பணி
பொது மக்கள் தங்களுக்கான பிரச்சினைகளுக்கு எந்தநேரமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 1998-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். 23 ஆண்டுகளாக போலீஸ் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள இவர் விரைவில் பதவி உயர்வு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.