மடத்துக்குளம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1600 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மடத்துக்குளம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1600 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-29 20:38 GMT
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,600 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படை
வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து அரசியல் கட்சியினரும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அனைத்து அரசியல் கட்சியினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக, 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, 1000-க்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் வைத்துள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி உத்தரவின்பேரில், பறக்கும் படை குழு  கார்த்திக்குமார் தலைமையில், ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் திடீரென ஆய்வு செய்யப்பட்டது.அப்போது அங்கிருந்த  சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
1,600 சேலைகள் பறிமுதல்
இதுகுறித்து பறக்கும் படை குழு கார்த்திக் குமார் கூறியதாவது:-
ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக சேலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இப்பகுதியிலுள்ள மணியகாரர் தோட்டம் என்ற முகவரியில் வசித்து வரும், மாரிமுத்து (வயது 55) என்பவரது வீட்டில் பறக்கும் படை குழுவை சேர்ந்த  எனது தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம், போலீஸ்காரர் அழகேஸ்வரன், மற்றும் போலீசார் கோவிந்தன், பேச்சியம்மாள், ஆகியோர் ஆய்வு நடத்தினோம். 
அப்போது 1,600 ஜிமிக்கி வைத்த சேலைகள் உள்ளது தெரிய வந்தது. இது குறித்து மாரிமுத்துவிடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதால், சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த அனைத்து சேலைகளையும் பறிமுதல் செய்து மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து மடத்துக்குளம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தியிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் ஒப்படைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என பறக்கும் படையினரால், கணக்கிடப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்