சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-02-26 21:20 GMT
சேலம்:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமி பாலியல் பலாத்காரம்
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள தோரமங்கலம் கிராமம் கருணைநகர் என்ற பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 63). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அருணாசலம் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி, ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிருந்த 8 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அவருடைய உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அருணாசலம் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அருணாசலத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அருணாசலத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்