அமராவதி அணை அருகே முதலைப்பண்ணையில் குழந்தைகளை கவரும் வனவிலங்கு பொம்மைகள்

முதலைப்பண்ணையில் குழந்தைகளை கவரும் வனவிலங்கு பொம்மைகள்

Update: 2021-02-26 17:08 GMT
தளி
அமராவதி அணை அருகே அமைந்துள்ள முதலைப் பண்ணையில் குழந்தைகளை கவரும் விதமாக வனவிலங்கு பொம்மைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

முதலை பண்ணை 

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன்பு பூங்கா, ராக் கார்டனும்,  அணையிலிருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில் முதலைப் பண்ணையும் அமைந்துள்ளது. இங்குள்ள பண்ணையில் 103 நன்னீர் முதலைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. அவற்றை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக முதலை பண்ணைக்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் ஒட்டகச்சிவிங்கி சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வனவிலங்குகளின்  சிலையுடன் கூடிய மர இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, பலவிதமான பூச்செடிகளும், செயற்கை புல்தரை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆர்வத்தோடு விளையாடும் குழந்தைகள்

இதற்கிடையில் முதலைகளை பார்ப்பதற்கு வருகின்ற குழந்தைகள் அங்குள்ள வனவிலங்கு பொம்மைகளை பார்த்து உற்சாகம் அடைவதுடன் அதில் ஏறி ஆர்வத்தோடு விளையாடி வருகின்றனர்.அதை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்