போலீஸ் கமிஷனர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் கமிஷனர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2021-02-25 20:41 GMT
மதுரை, பிப்
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் 100 வார்டுகளில் வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதி கோரி உதவி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட வில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தாத மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், திலகர்திடல் உதவி போலீஸ் கமிஷனர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ரத யாத்திரைக்கு உடனடியாக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. வாகனத்தையும் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நீதிபதி, ரதயாத்திரை வாகனத்தை உடனடியாக விடுவிக்கவும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் வருகிற 1-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்