ஏர்வாடியில் சுற்றுலா படகு சவாரி தொடக்கம்

ஏர்வாடியில் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது

Update: 2021-01-29 17:16 GMT
ஏர்வாடியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்ற போது எடுத்த படம்
கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்தில் இருந்து 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு பயணிகள் சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சியாக பயணிகள் 12 பேர் சுற்றுலா படகில் பாதுகாப்பு கவசம் அணிந்து பயணம் செய்தனர். மன்னார் வளைகுடா காப்பக இயக்குனர் மாரிமுத்து  பயணிகள் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். 

சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் கணேசலிங்கம் முன்னிலை வகித்தார். மண்டல அலுவலர் லோகநாதன், துணை மண்டல அலுவலர் கனகராஜ் மற்றும் காளிதாஸ், ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ், கவுன்சிலர் மலை ராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சுற்றுலா பயணிகளை கவரும் மணல்திட்டு பகுதிக்கு படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தலா 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்தபகுதியில் அரியவகை பவளப் பாறைகள், கடல் பாசிகளும், அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் காணப்படுகின்றன. ஒரே நேரத்தில் 12 பேர் வரை படகு சவாரி செய்யலாம். 

கடலுக்கு அடியில் உள்ள அனைத்து வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கண்டுமகிழலாம். இதன் மூலம் சிலர் அனுமதி இன்றி கடலுக்குள் சென்று வருவது தவிர்க்கப்படும். சுற்றுலாத் துறை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்