கோரிக்கைகளை வலியுறுத்தி ஜான்பாண்டியன் தலைமையில் கருப்பு சட்டை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜான்பாண்டியன் தலைமையில் மதுரையில் கருப்பு சட்டை போராட்டம் நடந்தது.

Update: 2020-11-11 04:45 GMT
மதுரை, 

தமிழகத்தில் பள்ளர், குடும்பர், தேவேந்திர குலத்தார், பண்ணாடி, வாதிரியார், காலாடி, கடையர் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேவேந்திர குலவேளாளர் சங்கம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டாக ஜான்பாண்டியன் மற்றும் அவரது கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு இதே நாளில் தான் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன் 365-வது நாளை நினைவுபடுத்தும் விதமாக மதுரை அண்ணாநகரில் போராட்டம் நேற்று மாலை நடந்தது.

இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்