கோடம்பாக்கத்தில் வீட்டில் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர், எனக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
அவர், சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி கல்லூரிக்கு சென்ற எனது மகள், அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் மாயமான எனது மகளை கண்டுபிடித்து தருமாறு அதில் கூறி இருந்தார்.
அதன்பரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து, மாயமான 17 வயது சிறுமியை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பெரியார் சாலையைச் சேர்ந்த உசைனுல் முசரப்(வயது 19) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் தேடினர்.
போக்சோ சட்டத்தில் கைது
அதில், அவர் கோடம்பாக்கம், சாமியார் மடம், முதல் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், உசைனுல் முசரப்புடன் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை மீட்டனர். விசாரணையில், இருவரும் ஒரே கேட்டரிங் கல்லூரியில் படித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதற்கிடையில் படிப்பை பாதியில் விட்ட முசரப், ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்தபடி, அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி இருந்தார்.
அப்போது அந்த சிறுமியை முசரப் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உசைனுல் முஷரப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.