ஆதம்பாக்கத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் கத்திமுனையில் வழிப்பறி; 7 பேர் கைது

ஆதம்பாக்கத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-05 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பாலாஜிநகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). இவர் ஆதம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது 7 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் கனகராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றது.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, வழிப் பறியில் ஈடுபட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த உதயகுமார் (24), செந்தில்குமார்(22), பால்ராஜ்(19), தரமணியை சேர்ந்த சூர்யா(20), ஆலந்தூர் லப்பை தெருவை சேர்ந்த ரிஸ்வான்(23), வேளச்சேரியை சேர்ந்த அருண்(23), மடுவின்கரையை சேர்ந்த ஜமில்அகமது (22) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மீட்ட போலீசார், 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்