கனமழை எதிரொலி: பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடிய விநாயகர் மண்டல்கள்

மும்பையில் கனமழை எதிரொலியாக பக்தர்கள் வருகை இன்றி விநாயகர் மண்டல்கள் வெறிச்சோடின.

Update: 2019-09-04 23:00 GMT
மும்பை, 

மும்பைவாசிகளை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கொண்டாட்டமான விநாயகர் சதுர்த்தி கடந்த 2-ந் தேதி உற்சாகத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா விநாயகர் சிலை, கிங்சர்க்கிளில் பணக்கார கணபதி என போற்றப்படும் ஜி.எஸ்.பி. மண்டல் உள்ளிட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகளை தரிசனம் செய்வதற்காக மண்டல்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில், நேற்று மும்பையில் கொட்டி தீர்த்து, இயல்பு வாழ்க்கையை முடக்கிய கனமழையால் விநாயகர் மண்டல்களுக்கு பக்தர்கள் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

அதிகாலையிலேயே வந்து மணிக்கணக்கில் காத்திருந்து லால்பாக் விநாயகரை பக்தர்கள் தரிசித்து வந்த நிலையில், நேற்று பக்தர்கள் வந்த உடன் தரிசனம் செய்தனர். அந்த அளவுக்கு லால்பாக் ராஜா விநாயகர் மண்டலுக்கு பக்தர்கள் வருகை குறைந்து இருந்தது.

இதுதவிர பல விநாயகர் மண்டல்களை வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததை காண முடிந்தது. இதன் காரணமாக பக்தர்கள் வருகை இல்லாமல் அந்த மண்டல்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கனமழையால் மண்டல்களில் விநாயகர் சிலைகளை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்தனர். 

மேலும் செய்திகள்